×
 

#BREAKING விடிந்ததுமே பகீர்... தமிழகத்தை நடுங்கவிட்ட தந்தை, மகன் இரட்டை கொலை... முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

வீரவநல்லூர் தந்தை-மகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற தந்தை-மகன் இரட்டைக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மூலம் வழிமறித்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தாக்கியது. இதில் காளிமுத்துவும், அவரது 5 வயது மகன் ஜெயராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய உறவினர்கள், அனைத்து முக்கிய குற்றவாளிகளும் கைது செய்யப்படும் வரை உயிரிழந்த இருவரின் உடல்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரை அடுத்தடுத்து கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் என்ற அஜித், வீரவநல்லூர் 80 அடி கால்வாய் அருகேயுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, கையில் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு காவலரின் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், கிருஷ்ணனின் இடது காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக காயமடைந்த காவலர் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா, சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share