நெல்லையில் காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... மருமகனை வீடு புகுந்து சல்லி, சல்லியாக வெட்டிய சாதிவெறி மாமனார்...!
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஆகாஷ்–சுமிதா தம்பதியை ஆணவக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் 23 வயதான ஆகாஷ். நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சுமிதா. இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.
இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இதனால் இருவரது பெற்றோர் தரப்பிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆகாஷ்–சுமிதா தம்பதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆகாஷ் தோட்டத்தில் நெல்லிக்காய் பறிக்கும் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?
நேற்று வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் ஆகாஷ் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தபோது, மேலஅரியநாயகிபுரத்தில் இருந்து சுமிதாவின் தந்தை முருகன் இருசக்கர வாகனத்தில் சிவகாமிபுரத்திற்கு வந்துள்ளார்.
அப்போது மகளின் வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்ற முருகன், தனது மருமகன் என்றும் பாராமல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆகாஷின் தலை, கால் மற்றும் கைப் பகுதிகளில் வெட்டியுள்ளார். மேலும், தனது மகள் சுமிதாவின் கையிலும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷ் மற்றும் சுமிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் முருகன் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணம் செய்த தம்பதிக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், இந்த சம்பவம் சிவகாமிபுரம் கிராமப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மார்க்... நெல்லையில் நின்று விஜயை விளாசித் தள்ளிய நயினார் நாகேந்திரன்...!