×
 

10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை என்று அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் கலந்துகொண்டார். அப்போது தமிழகப் பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் அரசு மேற்கொண்டு வரும் மகளிர் நலத்திட்டங்கள் குறித்து அவர் ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழகத்தில் பெண்கள் கல்வியில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார். தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்ற ஒரு பதிவு கூட பெண்களிடம் இல்லை. அந்த அளவிற்குத் தமிழகப் பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளனர் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பெண்களின் உரிமைகள் போராட்டங்கள் மூலமாகவே பெறப்பட்டவை என்று குறிப்பிட்ட அவர், பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு வழங்கியதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஒரு வரலாற்றுச் சாதனையாகக் குறிப்பிட்டார். மகளிர் உரிமைத் தொகை இது வரை கிடைக்காத தகுதியுள்ள பெண்கள், கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்கு அரசு அறிவித்துள்ள '181' என்ற உதவி எண்ணைத் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம் என அவர் வலியுறுத்தினார். பெண்களை வீட்டிற்குள் முடக்கி வைக்காமல் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேறுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என அமைச்சர் தனது உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
 

இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share