புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் பிளவு அபாயம்..!! நடப்பது என்ன..??
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியிருக்கும் சூழலில், நிபந்தனைகள் குறித்து முடிவெடுக்க பாஜகவுக்கு 24 மணிநேரம் ரங்கசாமி கெடு விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு தலைமை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 16) தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் ஒரு வார கால அவகாசம் மட்டுமே உள்ள நிலையில், இரண்டு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், உண்மையில் செயல்படக்கூடிய நாட்கள் வெறும் 5 நாட்கள்தான் எஞ்சியுள்ளன. இந்த இறுக்கமான கால அட்டவணையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளன.
தற்போது புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இந்தக் கூட்டணி, வரும் தேர்தலிலும் தொடரும் என பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த வாரம் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனால், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் இருந்து இரண்டு முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!
முதலாவதாக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான உறுதிமொழியை மத்திய அரசு அளிக்க வேண்டும். இரண்டாவதாக, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயகக் கட்சியை (எல்ஜேகே) என்டிஏ கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதாகும். இந்த நிபந்தனைகளை பாஜக ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இன்று காலை புதுச்சேரியில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற இருந்த கூட்டணி பேச்சுவார்த்தையை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்தார்.
பாஜக தரப்பில் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தும் ரங்கசாமியை சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்றார். இது கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவை தெளிவாகக் காட்டுகிறது. இந்நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தலைமை பாஜகவுக்கு 24 மணி நேர கெடு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபந்தனைகளை ஏற்காவிட்டால் மாற்று வழிகளை நாடுவோம் என்பது அவர்களின் நிலைப்பாடு.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யுடன் ரங்கசாமி பேசியதாகவும், பாஜக ஒத்துழைப்பு மறுத்தால் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்புமனு தாக்கல் தொடங்கிய இந்த முக்கிய கட்டத்தில், என்டிஏ கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ரங்கசாமியின் முடிவு புதுச்சேரி அரசியலை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலனுக்கான மாநில அந்தஸ்து கோரிக்கையும், கூட்டணி அரசியலின் சிக்கல்களும் இத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!