தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!
'தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் தேவை' என, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை: சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் பாதியாகக் குறைந்துள்ள நிலையில், தனித்து போட்டியிடும் உத்தியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வலியுறுத்தி வருகின்றனர். இது கட்சியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2016 சட்டசபை தேர்தலில் 1.10 சதவீதம் ஓட்டுகளுடன் தொடங்கி, தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டது. 2019 லோக்சபா தேர்தலில் 3.89 சதவீதம், 2021 சட்டசபை தேர்தலில் 6.72 சதவீதம், 2024 லோக்சபா தேர்தலில் 8.22 சதவீதம் ஓட்டுகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்தது. ஆனால் சமீபத்திய சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் சுமார் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வி ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நிலைமை மாறியதாகக் கூறப்படுகிறது. சீமான், விஜயை கடுமையாக விமர்சித்ததோடு, ஈ.வெ.ரா. மற்றும் திராவிட கொள்கைகளையும் தாக்கினார். பெரும்பாலான தொகுதிகளில் சீமான் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. த.வெ.க., வருகை நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கியை பாதித்துள்ளதாகக் கட்சியினர் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அலட்சியம்..! அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்குவதா..? சீமான் காட்டம்..!!
இந்நிலையில், வரும் தேர்தல்களில் கொள்கை சார்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் சீமானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சொந்த பணத்தில் தேர்தல் செலவு செய்து தோற்ற நிலையில், நிதிச் சுமையும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “த.வெ.க., வருகைக்கு முன் நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக இருந்தது. இளைஞர்கள் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தனியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. தி.மு.க., போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து த.வெ.க.,வை எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் நிதிச் சுமையிலும் இருந்து மீள வேண்டும்” என்றனர்.
நாம் தமிழர் கட்சியின் எதிர்கால உத்தி குறித்து சீமான் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் உள் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: 2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!