பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!
தமிழ்நாட்டில் மட்டும் கள் போதைப்பொருளானது எப்படி? என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு கள் இறக்க தேவையான பொருட்களுடன் கயிறு மூலம் கம்பு கட்டப்பட்டுள்ள சுமார் 22 அடி உயர பனைமரத்தில் சரசரவென ஏறி உச்சிக்கு சென்றார். பின்னர் பனைமரத்தில் இருந்து கள் இறக்கினார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் கள் எங்கள் உரிமை.. கள் எங்கள் உணவு என்று கூறி முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து கீழே இறங்கி வந்த சீமான், தான் இறக்கிய கள்ளை பனை ஓலை பட்டையில் தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்தார். ஆண், பெண் தொண்டர்கள் என பலரும் கள்ளை வாங்கி குடித்தனர்.
இதையும் படிங்க: சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!
தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சீமான், பனை எனது தேசிய மரம்.. அதனை நான் இழக்க முடியாது. பனை அதை நினை.. தாயை போல் கட்டி அணை.. 840 பயன்களை தரும் உலக உயிர் பனை மரம் தான். பனக்கள்ளை சாராயம் என்று சொன்னீர்கள் என்றால் நீங்கள் விற்பதற்கு பெயர் என்ன.. கள்ளை நஞ்சு என்று சொன்னால், அரசு நடத்தும் டாஸ்மாக்குகளில் விற்பது என்ன கோவிலில் கொடுக்கின்ற புனித நீரா.. என்று கேள்வி எழுப்பினார். மேலும் 'கள்' விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா?" என்றும் தைப்பூசத்திற்கு முருகனுக்கு தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டும், ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அதற்கு ஒரு மாநாடு நடத்தப்போகிறேன் என்றும் பேசியிருந்தார்.
இதற்கிடையே சீமானின் இந்த கள் இறக்கும் போராட்டம் சரியா? என விவாவதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மீண்டும் கள் குறித்துப் பேசியிருக்கும் சீமான், புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி?
தமிழர் வாழ்வியலோடு கலந்தது பனைமரம்; பரம்பரையாக பின்பற்றப்படும் தொழில். அது எப்படி ஒரு சாதியின் மரமாக மாறியது. நான் பனைமரம் ஏறினால் அது சாதி பெயராக மாறிவிடுகிறது. நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தால், விசாரணையை எதிர்கொள்ளத் தயார்; சாராய ஆலையைத் திறந்தால் நியாயம், நாங்கள் பனை மரம் ஏறினால் குற்றமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!