அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!
அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக இருந்த அண்ணா தி.மு.க.வை தற்போது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கட்சியாக மாற்றி விட்டது அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தென்காசி மாவட்டத்தில் தி.மு.க. பிரசாரத்தை தொடங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். கடையநல்லூர் அருகே அச்சன்புதூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் கத்துகிறார், ஆனால் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை. மக்களே அவருக்கு பதில் சொல்லிவிடுவார்கள்” என்று கூறினார்.
மேலும், “அவருக்கு ஒரே ஒரு விஷயம் தான் தெரியும் – தன்னை ஆளாக்கியவர்களுக்கு துரோகம் செய்வது. அரசியலில் அறிமுகப்படுத்தியவர்களை துரோகம் செய்வது. ஜெயலலிதா அம்மா ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவி கொடுத்தவரை எப்படி துரோகம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று குற்றம்சாட்டினார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் ‘அம்மா தான் நிரந்தர பொதுச்செயலாளர்’ என்ற தீர்மானத்தை தூக்கி எறிந்து, தானே பொதுச்செயலாளர், முதலமைச்சர் என்று அறிவித்ததால் 10 தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்ததாக ஓபிஎஸ் சாடினார்.
இதையும் படிங்க: 3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!
குறிப்பாக, “அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக இருந்த அண்ணா தி.மு.க.வை தற்போது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த கட்சியாக மாற்றிவிட்டது எடப்பாடி செய்த துரோகம்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளில் 40-இல் கடுமையான தோல்வியை சந்தித்ததாகவும், உண்மையான அதிமுக தொண்டர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் மீண்டும் பெரும் தோல்வி காத்திருப்பதாக எச்சரித்தார்.
தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டதை மக்கள் வரவேற்றுள்ளதாகவும் ஓபிஎஸ் கூறினார். கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.க. – அதிமுக இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. ஓபிஎஸ்-இன் இந்த பேச்சு தென் மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகவில் அதிமுக நடத்தும் சீக்ரெட் ஆபரேஷன்! எடப்பாடி பழனிசாமி கொடுத்த அசைன்மென்ட்!