×
 

பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அறநிலையங்களுக்குச் சொந்தமான சொத்துகளை பதிவு செய்வதில் பின்பற்ற வேண்டிய சட்ட விதிகள் இருந்தும், பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் அவை முறையாக கடைபிடிக்கப்படவில்லை.

பழனி மடம் நில விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மடங்கள், ஆஸ்ரமங்கள் மற்றும் அறநிலையங்களுக்குச் சொந்தமான சொத்துகளை பதிவு செய்வதில் பின்பற்ற வேண்டிய சட்ட விதிகள் இருந்தும், பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் அவை முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி கோவிலுடன் தொடர்புடைய மடத்துக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், சுமார் ₹100 கோடி மதிப்புடையது எனக் கூறப்படுகிறது. இந்த நிலம் சமீபத்தில் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது. மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட்டு அந்த பத்திரப்பதிவை ரத்து செய்தது. தற்போது இந்த பழனி மடம் நில விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதிவுத்துறை சார்பிலும் இரண்டு உயர் மட்டக் குழுக்கள் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கோவில்கள், மடங்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த அதிர்ச்சி... ரூ.60 கோடி அரசு நிலத்தை ஆட்டையைப் போட பிளான்... பழனியில் நடப்பது என்ன?

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு சொந்தமானதாகக் கூறப்படும் திருவாரூர் மாவட்டம் விளக்குடி கிராமத்தில் உள்ள 87 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்கான பத்திரம் கடந்த மார்ச் மாதம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலத்தின் பட்டா மற்றும் வருவாய் பதிவுகளை ஆய்வு செய்த சார் பதிவாளர், பதிவு சட்டத்தின் 22-ஏ பிரிவை சுட்டிக்காட்டி, அரசின் உரிய அனுமதி இல்லாததால் அந்த பத்திரத்தை பதிவு செய்ய மறுத்துள்ளார்.

அந்த மறுப்புரையில், சமய நோக்கத்திற்காக செயல்படும் மடங்கள், அறநிலையங்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்கு சொந்தமான சொத்துகளை விற்பனை செய்ய அரசின் அனுமதி கட்டாயம் என்றும், அதுபோன்ற அனுமதி இல்லாத நிலையில் பதிவு செய்ய முடியாது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, பழனி மடம் நில விவகாரத்தில் இதே சட்ட விதிகள் இருந்தபோதும், அந்த பத்திரம் ஏன் பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வி மேலும் வலுப்பெற்றுள்ளது. பதிவுத்துறை உயரதிகாரிகள் கூறுகையில், பதிவு சட்டம், பதிவுத்துறை தலைமை அலுவலகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நடைமுறைகள் அனைத்தும் இருந்தும், பழனியில் அவை முறையாக பின்பற்றப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share