×
 

மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, திண்டுக்கல்லில் தொடங்கிய இதயநோய்க்கான சிகிச்சையை மேலும் 5 நாட்களுக்கு தொடர அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரை: பழநி தண்டபாணி சுவாமி கோவில் மடத்தின் நிலமோசடி வழக்கு மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் அடுத்தடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழநி நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வழக்கறிஞர் அன்வர்தீன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே, இதயநோய் பாதிப்பு காரணமாக ஏற்கனவே ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடியை அடுத்து ஆயக்குடியிலும் கைவரிசை! கோவில் நிலங்களை குறிவைக்கும் கும்பல்?

வழக்கில் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, திண்டுக்கல்லில் தொடங்கிய இதயநோய்க்கான சிகிச்சையை மேலும் 5 நாட்களுக்கு தொடர அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதயவலி ஏற்பட்டால் மருந்து சிகிச்சைக்குப் பிறகு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இயல்பாக சுவாசித்து வருவதால் மருத்துவப்பிரிவு வார்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு வழக்கில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக கூறப்படும் வழக்கில் ராமநாதபுரம் துணை கலெக்டர் அன்பழகன் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அன்பழகனுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இதயநோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

நிலமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share