நீயா? நானா? போட்டி... அமைச்சர்களின் அக்கப்போரால் அரண்டு நிற்கும் பண்ருட்டி... திமுகவுக்கு புது தலைவலி...!
கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் எம்ஆர். கே பன்னீர்செல்வமும் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி. கணேசனும் பணியாற்றி வருகின்றனர்.
பண்ருட்டியில் நடைபெறும் உள்ளடி வேலைகளால் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியை கடந்த முறையை போல கூட்டணியிடமே தள்ளிவிடலாமா என திமுக்க தலைமை தீவிரமாக யோசித்து வருவதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து பேச்சு கிளம்பியுள்ளது. கடலூர் மாவட்டம் திமுகவில் நிர்வாக ரீதியாக இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் எம்ஆர். கே பன்னீர்செல்வமும் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி. கணேசனும் பணியாற்றி வருகின்றனர்.
என்னதான் மாவட்டத்தை பிரித்து கணேசனிடம் கொடுத்திருந்தாலும் எம்ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதிக்கமே மாவட்டம் முழுவதும் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தால் பலன் பெற்றவர்கள் இன்றுவரை அவருக்கு விசுவாசமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பண்ருட்டி பகுதியில் பன்னீருக்கான ஆதரவு கொஞ்சம் தூக்கலாகவே இருப்பது கணேசனின் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
இதையும் படிங்க: திராவிடம்னா என்ன? ஐடியா இல்ல SKIP பண்ணிடுங்க! பல்பு வாங்கிய இன்ஸ்டா புரட்சியாளர்!
தொகுதியில் எந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றாலும் அதற்காக வைக்கப்படும் பேனர்களில் பன்னீர்செல்வத்தின் புகைப்படம் பெரிதாகவும், மாவட்ட அமைச்சரான சிவி கணேசனின் புகைப்படம் சிறிதளவிலும் இடம் பெறுவது எழுதப்படாத விதியாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலில் எம்ஆர் கே பன்னீர் செல்வத்திற்கு ஜூனியராக இருந்தாலும் மாவட்ட செயலாளர் என்ற பதவிக்காகவாவது அவருக்கான மரியாதையை வழங்க வேண்டும் என கணேசனின் ஆதரவாளர்கள் குமறுகின்றனர்.
இந்த பஞ்சாயத்திற்காகத்தான் கடந்த முறை பண்ருட்டி தொகுதி இறுதி நேரத்தில் கூட்டணி கட்சிக்கு கைமாறியதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியாக ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டால் உண்மை காரணமோ சாதிதான் என்கின்றனர் பண்ருட்டி வட்ட திமுகவினர். ஏனெனில் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்தினரே பெரும்பாலும் இருப்பதால் கட்சியினர் மத்தியில் எம்ஆர். கே பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்த போதிலும் இரு அமைச்சர்களும் பண்ருட்டி தொகுதியில் தங்கள் ஆதரவு பெற்ற வேட்பாளரை நிறுத்தி விட வேண்டும் என மெனக்கெட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க அமைச்சர் சி.வி. கணேசனுக்கு எதிராக அண்ணாகிராமம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது அண்ணா கிராமம் ஒன்றியும் அண்மையில் தான் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளராக வெங்கட்ராமனும் மேற்கு ஒன்றிய செயலாளராக ராமச்சந்திரனும் நியமிக்கப்பட்டனர். அண்ணா கிராம பகுதியில் வன்னியர்களும் பட்டியலின மக்களும் சரிபாதி உள்ள நிலையில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களே ஒன்றிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
முக்கியமாக வெங்கட்ராமனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவருக்கு கைக்கூலியாக மாறி 70 வயது முதியவரான ராமச்சந்திரனை பொறுப்பில் அமர்த்தியதாக அமைச்சர் கணேசனுக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. ப்ட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர் கணேசனால் சொந்த சமுதாய மக்களின் வாக்குகளை கூட பெற முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வேறு ஒரு பக்கம் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதனை காரணம் காட்டி கணேசன் கைகாட்டும் நபருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு வழங்க கூடாது என எம்ஆர். கே பன்னீர் செல்வம் தரப்பு தலைமையின் காதுகளில் ஓதி வருவதாக சொல்லப்படுகிறது. ஒன்றிய செயலாளரான வெங்கட்ராமனை எம்எல்ஏ வேட்பாளராக நிறுத்துவதற்கு அமைச்சர் சி.வி. கணேசனும், பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரனை முன்னிறுத்த எம்.ஆர்.கேவும் போட்டா போட்டி போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இரு அமைச்சர்களின் பஞ்சாயத்து காரணமாகத்தான் இந்த முறையும் பண்ருட்டியைக் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிவிடலாம் என திமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் கூட கடலூரை திமுக கை கழுவி விட்டதாக புலம்பும் உடன்பிறப்புகள் சொந்த கட்சி வேட்பாளருக்கு சீட் கொடுத்தால் தான் உற்சாகமாக செயல்படுவோம் என தீர்மானித்திருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!