பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!
கடந்த திமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது
தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் சர்வதேச விமான நிலைய திட்டம் மீண்டும் கவனத்தின் மையமாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் விமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும், 400-க்கும் அதிகமான விமானங்களும் இயக்கப்படுகின்றன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான விமான போக்குவரத்து வளர்ச்சியை தாங்கும் வகையில் பரந்தூர் திட்டம் வடிவமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமான நிலையம் மட்டுமின்றி, அதைச் சுற்றி சரக்குக் கிடங்குகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுடன் “ஏரோட்ரோபோலிஸ்” நகரம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி வேகமடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய பணிகள் நிறுத்தம்!! சிக்சர் மேல் சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்!! சிப்கார் அமைக்க திட்டம்?
இதற்காக ஏற்கனவே சுமார் 3,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவமும் பெற்றது. கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த விஜய், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். தற்போது அவரது தலைமையில் அரசு அமைந்துள்ளதால், திட்டத்தின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் குறித்து விமான நிலைய ஆணையம் விரிவான ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. நில அமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் போக்குவரத்து இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை விரைவில் முதல்வர் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் பரந்தூர் திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன்பே விஜய் எதிர்த்த பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்!! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!