கொலை நகரமா? கொங்கு நகரமா?... ஒரே மாதத்தில் 9 கொலைகள்... குலை நடுங்கும் கோவை மக்கள்..!
கோவை மாவட்டத்தில் கடந்த 28 நாட்களில் 9 கொலைகள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையை சேர்ந்த இளைஞர் நவீன் (25) என்பவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர்களோடு தங்கி வேலை தேடி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேரை பீளமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த அஸ்வின் (22) என்ற இளைஞரை அதே பகுதியை சேர்ந்த இளம் சகோதரர்கள் மது போதையில் கொலை செய்து இளைஞர் அஸ்வினை தாக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த அஸ்வின் உடலுடன் சேர்ந்து அதனை செல்பியாக புகைப்படம் எடுத்து அனைத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த அமுதன் (19) என்ற மாணவரை சக மாணவர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 15 மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக கல்லூரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவலை கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!
இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சாந்தி (58) என்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் போதையில் வந்து கொடூரமாக தாக்கி கொலை செய்ததோடு வீட்டிலிருந்த சில பொருட்களை திருடி சென்றார். பட்டப் பகலில் வீடு புகுந்து நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயது இளைஞரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்ற தொழிலாளியை அவரது உறவினரான சிவக்குமார் என்பவர் வீட்டிலேயே அடித்து கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தப்பிச் சென்ற சிவகுமாரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி கோவை சூலூர் அடுத்த சிலகரைசல் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் என்பவர் வீட்டின் அருகே சத்தம் போட்டுக் கொண்டிருந்த கண்ணன் என்பவரிடம், சத்தம் போட வேண்டாம் என கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அங்கிருந்த கட்டையால் செந்தில்குமாரை தாக்கி கொலை செய்தார். இந்த வழக்கில் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அன்றைய தினமே சோமனூர் டாஸ்மாக் அருகே தேவதாஸ் (35) என்ற இளைஞர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கஞ்சா விற்பனை தொடர்பாக இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவை நீலாம்பூர் அருகே தஞ்சாவூர் சேர்ந்த விக்னேஷ் (32) என்ற தொழிலாளி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சங்கரேஸ்வரன் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். விக்னேஷ் சங்கரேஸ்வரனிடம் செல்போன் வாங்கி பேசி நிலையில் அதை கொடுக்காததால் பீர் பாட்டிலால் குத்தி கொலை கொலை செய்ததாக வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆலந்துறை அருகே நாகராஜ் (60) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (61) என்ற அவரது நண்பர் வெட்டி கொலை செய்தார். கந்தசாமியின் மனைவியுடன் நாகராஜ் தவறான தொடர்பில் இருந்ததாக எண்ணி இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த 28 நாட்களில் மட்டும் கல்லூரி மாணவர், பெண், இளைஞர், தொழிலாளிகள் என அடுத்தடுத்து 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான கொலைகள் மது போதையில் நடைபெற்றதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் விடிய விடிய வேட்டை... கல்லூரி மாணவர்கள் அறையில் சிக்கிய பயங்கர பொருட்கள்... திகைத்துப்போன போலீஸ்...!