×
 

இன்று இரவு 08.30 மணி! மறந்திராதீங்க மக்களே! நாட்டு மக்களிடம் உரையாடுகிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி இன்று இரவு 8: 30 நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான முக்கிய மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக 131வது அரசியல் சட்டத் திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதா ஆகியவை சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன. 

ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான 131வது அரசியல் சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் தோல்வியடைந்தது. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 எம்.பி.க்களும், எதிராக 230 எம்.பி.க்களும் ஓட்டளித்தனர். பெரும்பான்மைக்குத் தேவையான 352 வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்திய பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கணும்!! குற்றம் சாட்டும் காங்.,!

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்றிரவு 8:30 மணிக்கு தேசிய மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மசோதா தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு, மகளிர் வலுவூட்டல் குறித்த அரசின் உறுதிப்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் தனது கருத்துகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இந்த சிறப்புக் கூட்டத்தொடர் மூலம் அதை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா தோல்வியுற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே பார்லிமென்ட்டில் பேசியபோது, மகளிர் வலுவூட்டலை தேசத்தின் முக்கிய கடமையாக வலியுறுத்தியிருந்தார்.

இன்றிரவு உரையில் பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. மகளிர் உரிமை, தொகுதி மறுவரையறை, எதிர்கால தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் இந்த உரையில் இடம்பெறலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேர்தல் சூழல் நெருங்கும் வேளையில் பிரதமர் மோடியின் இந்த உரை தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share