நாளை கலகலக்கப்போகும் தைலாபுரம்... அப்பா ராமதாஸ் ‘ராக்’... மகன் அன்புமணி ‘ஷாக்’...!
நாளை வட மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
பாமகவில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிதாக 123 பொறுப்பாளர்களை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நியமித்துள்ள நிலையில், நாளை வட மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அதன்படி பொருளாளராக இருந்த திலகபாமா நீக்கப்பட்டு, சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார். மேலும் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு கோபு நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பாமகவில் நேற்று வரை 60 மாவட்ட செயலாளர்கள். 39 மாவட்ட தலைவர்களை மாற்றி மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றில் 123 பொறுப்பாளர்களை மருத்துவர்.ராமதாஸ் புதிதாக நியமனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: தீராத அப்பா - மகன் பிரச்சனை... அதிருப்தியில் அதிமுகவில் இணைந்த பாமக தொண்டர்கள்!
இந்நிலையில் இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோரை மருத்துவர் ராமதாஸ் புதிதாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை தைலாபுரம் இல்லத்தில் வட மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அதனை தொடர்ந்து பாமகவின் பொதுச் செயலாளர் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.பாமகவில் பொறுப்பாளர்கள் மாற்றம் தொடரும் என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்புமணியை பார்த்தாலே BP ஏறுது... கடுப்பாக பேசிய ராமதாஸ்!!