×
 

மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

''தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என 'ரீல்ஸ்' போட்டது மக்கள் தான்'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்க்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ‘ரீல்ஸ்’ கலாசாரத்தை விமர்சித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி ‘ரீல்ஸ்’ வெளியிட்டதே மக்கள் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், த.வெ.க. அரசின் சாதனைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

“ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதுமே த.வெ.க. அரசின் சாதனை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ‘ரீல்ஸ்’ போடுவதை அவர் சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். ஆனால், தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று ‘ரீல்ஸ்’ போட்டதே மக்கள் தான்” என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

ஒரு குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலை மாறி, ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்ததாகவும் அவர் கூறினார். ஊழலை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னைகளில் போதைப்பொருள் பிரச்னையும் ஒன்று என ராஜ்மோகன் குறிப்பிட்டார். இந்த பிரச்னை ஒரே நாளில் உருவானது அல்ல என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இது உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்தும் என்றும், இதில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசு இணைந்து செயல்படும் வகையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதனிடையே, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததாக கூறப்படும் கருத்து குறித்தும் ராஜ்மோகன் விமர்சனம் செய்தார். சைதாப்பேட்டை மக்களுக்கு நல்ல சாவு வராது என்று அவர் பேசியதாக குறிப்பிட்ட அமைச்சர், மருத்துவத் துறையில் உள்ள பிரச்னைகளில் இருந்து மக்கள் மீண்டு, இனி நல்ல வாழ்க்கையை பெறப்போகிறார்கள் என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் ‘ரீல்ஸ்’ மற்றும் அரசியல் பிரசாரத்தை மையமாக வைத்து ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share