×
 

கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறாரா அன்புமணி? ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!!

என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், நான் தான் தலைவர் என்று அன்புமணி பதிலடி கொடுத்தார். வன்னியர் சங்க மாநாட்டிலும் அந்த பிரச்சனை எதிரொலித்தது. அண்மையில், அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசியல் விவகாரங்கள், குடும்ப விவகாரங்கள் என அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 5 ஆம் தேதி ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில், அன்புமணி சந்தித்துப் பேசினார். அதே நாளில், பாஜகவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை சந்தித்துப் பேசினர்.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு ஒருபுறம் இருக்க, இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களை கட்சியை விட்டு நீக்கி வரும் ராமதாஸ், பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலுவை நீக்கி அதிரடி காட்டினார். ஆனால், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை, சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி தங்கள் தலைவராக வழக்கறிஞர் கே.பாலு தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், 22 ஆண்டுகளாக இயங்கி வரும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இது ஒரு புறம் இருக்க கட்சியின் மாவட்டச் செயலாளர்களை பல கட்டங்களாக சந்தித்து வரும் அன்புமணி அதன் ஒரு பகுதியாக மகளிர் அணி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி தலைமையில் பாமக மகளிர் மாநாடு நடைபெறும் என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், மகளிர் அணி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அப்பா பாணியில் அதிரடி காட்டிய அன்புமணி... தைலாபுரம் வாசலுக்கு தலை தெறிக்க ஓடிய கரூர் மா.செ...!

இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய ராமதாஸ்,எங்கள் இருவருடைய சமரசப் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. அவர்கள் இங்கே வந்தார்கள். நான் அங்கே போனேன். பேச்சுவார்த்தை சென்றது. ஆனால், கடைசியில் பேச்சுவார்த்தை 'டிரா'வில் முடிந்துவிட்டது. 14 பஞ்சாயத்துக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் நான் தொடங்கிய 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் . இது தான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டேன். அன்புமணிக்காக தலைவர் பதவி விட்டுத்தர தயார் என்று கூறினேன். அதற்காக, மாநாட்டிற்கு முன்பு, கௌரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தினுடைய தலைவர் இருவரும் அன்புமணியை சந்திக்க செல்ல இருந்தனர். ஆனால், வரவேண்டாம். போன்லேயே சொல்லுங்க என்று அவர் கூறிவிட்டார். மாநாடு மேட்டையிலேயே கையெழுத்து போட்டுதர தயாராக இருப்பதாக கூறினேன் அதற்கும் ஏற்கவில்லை.

அதனால் இயற்கையான கோபம் வந்து நீயா, நானா பார்த்துவிடுகிறேன் என வந்துவிட்டேன். இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? உரிமை இல்லையா என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது. குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தையை மிஞ்சிய பிள்ளை இருக்கக்கூடாது. இதுவே தர்மம். இதுவே சார்ஸ்த்திர சம்பிரதாயம் ஆகும். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவ படத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணம் ஆக்கி, என் பெயரில் நடைபயணம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே. ஒவ்வொரு செங்கலாக கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் கடலூரில் கை வைத்த ராமதாஸ்.. அன்புமணிக்கு விழுந்த அடுத்த அடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share