×
 

அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

கூட்டணி அமையாவிட்டால், அன்புமணி தரப்பு பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாமகவில் தொடரும் உள் மோதல் காரணமாக, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பு தனித்து களமிறங்கும் திட்டத்தை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி அமையாவிட்டால், அன்புமணி தரப்பு போட்டியிடும் தொகுதிகளில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட திட்டமிட்டுள்ளது.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே நீண்டகால மோதல் நீடிக்கிறது. இதனால் கட்சி இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. அன்புமணி தரப்பு அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு அந்த கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்க முதல்வர் ஸ்டாலின் விரும்பினாலும், பாமக - விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்ற காரணத்தாலும், விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பாலும் திமுக தயக்கம் காட்டுகிறது.

இதையும் படிங்க: அப்பாவை ஆட்டையில சேக்காதீங்க!! அன்புமணி எதிர்ப்பால் பாஜக மறுப்பு! திமுக கைவிட்டதால் சிக்கலில் ராமதாஸ்!

இதனால் ராமதாஸ் தரப்பு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சு நடத்தியது. ஆனால் 'பட்டியலின மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்' என்ற எச்சரிக்கை காரணமாக தவெகவும் ராமதாஸை சேர்க்க தயங்கியது.

எந்த கூட்டணியிலும் இணைய முடியாத நிலைக்கு ராமதாஸ் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் திமுக தரப்பு ராமதாஸை குறைந்தது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் உள்ளன. அப்படி செய்தால் ராமதாஸ் விரும்பும் ஒன்றிரண்டு நபர்களை வெற்றி பெற வைப்பதாக திமுக உறுதி அளித்ததாக ராமதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க போட்டி போடுகின்றனர். ஆனால் ராமதாஸை யாரும் கண்டுகொள்ளாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் ராமதாஸ் உள்ளார். அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் உட்பட 30 தொகுதிகளில் தன் தரப்பு வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வன்னியர் பெரும்பான்மை உள்ள வடக்கு மாவட்ட தொகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். தமிழக அரசியலில் பாமக பிரிவு மீண்டும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சலசலப்பு அனைத்து கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share