பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க.. ஒரு மாதத்திற்கு பழனி முருகன் கோவிலில் இது கிடையாதாம்..!
பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அழகென்ற சொல்லுக்கு முருகா... தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிவிடும். குறிப்பாக தைப்பூசம் பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பர். இதேபோல பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தை கிருத்திகை உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பழனி கோயிலில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம்.
இதையும் படிங்க: முருகன் கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்.. ஆனால் உள்ளே போன அந்த நபர்.. கிளம்பிய சர்ச்சை..!
இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் 690 படிகள் ஏறமுடியாத வயதானவர்கள், சிறுவர்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியே மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பாபிஷேகம் முடிஞ்சாச்சு.. இனி செந்தில்நாதனை தரிசிக்கலாம்.. போலாம் ரைட்..!