"இன்றைய இளைஞர்கள் கேள்வி கேட்கிறார்கள்... பதில் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்!" – மோகன் பாகவத் அறிவுரை
நாங்கள் இளைஞர்களாக இருநத காலத்தில் அது கீழ்ப்படிதலின் காலமாக இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. புதிய இளம் தலை முறையினர் கேள்வி கேட்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக கேள்விகள் எழுப்புவது நல்ல மாற்றம் என்றும், அவர்களது சந்தேகங்களுக்கு பெற்றோர்களும் பெரியவர்களும் பொறுமையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குடும்பங்களில் உரையாடல் குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பாகவத், தாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திற்கும் தற்போதைய தலைமுறைக்கும் இடையே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
முந்தைய தலைமுறையில் பெரியவர்கள் கூறியதை கேட்டு கீழ்ப்படியும் மனப்பான்மை அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த மாற்றத்தை எதிர்மறையாக பார்க்காமல், அவர்களின் ஆர்வமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் RSS சாஹா பயிற்சியா? என்ன நடந்தது..? தமிழக அரசு விளக்கம்..!!
இளம் தலைமுறையினர் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான மற்றும் பொறுமையான பதில்களை வழங்குவது பெரியவர்களின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார். குழந்தைகளிடம் அன்புடன் பழகி, அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் எண்ணங்களை கேட்டு உரையாடும்போது நல்ல புரிதல் உருவாகும் என்று கூறினார்.
மேலும், தற்போதைய குடும்பங்களில் நேரடியாக அமர்ந்து பேசும் பழக்கம் குறைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைப்பளு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பேசும் நேரம் குறைந்துள்ளதாகவும், இது குழந்தைகளின் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகள் பெற்றோரின் வார்த்தைகளைவிட அவர்களின் செயல்பாடுகளையும் வாழ்க்கை முறையையும் அதிகமாக கவனித்து கற்றுக்கொள்கிறார்கள் என்று மோகன் பாகவத் கூறினார். எனவே, பெற்றோர்கள் தங்களது நடத்தையின் மூலம் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் கேள்விகளை புறக்கணிக்காமல், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அறிவை தொடர்ந்து வளர்த்துக்கொள்வதும், நல்ல பண்புகளுடன் வாழ்வதும் இளம் தலைமுறையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். குடும்பத்தில் திறந்த உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் அன்பான அணுகுமுறை இருந்தால் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கும் அது பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இளம் தலைமுறையினரின் சிந்தனை, பெற்றோரின் பங்கு மற்றும் குடும்ப உறவுகள் குறித்து மோகன் பாகவத் தெரிவித்த இந்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருகின்றன.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!