“பாஜககாரங்க கையை தூக்குங்க...” - வாண்டடாக போய் வம்பிழுத்த சனம் ஷெட்டி... பாலன் இல்லத்தில் பேசியது என்ன?
எங்கள் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை.
சென்னை தியாகராயர் நகர் CPI அலுவலகத்தில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் சர்ச்சையாக பேசியதாக வெளியேற்றப்பட்ட நடிகை சனம் ஷெட்டி, “மைக்கை புடிங்கிட்டு துரத்திட்டாங்க சார்.. இதுதான் இவங்க ஜனநாயகத்தோட லட்சணமா..? அப்போ ஜனநாயகன் படம் பார்த்த நான் ஜோக்கரா..? வெற்றிமாறன் சார் எத்தனை படத்தை எடுத்தாரு.. அவரு உட்கார்ந்துட்டு இருக்காரே..? நீங்க 100 பேர் இல்ல 1000 பேர் கூட இருங்க அதெல்லாம் எனக்கு கவலை இல்லை..? இது ஒரு போலி போராட்டம்..? என ஆவேசமாக பேசியது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் பாலன் இல்லத்திற்குள் என்ன பேசினார் என்பது குறித்த முழு விளக்கம் வெளியாகியுள்ளது.
இதற்கு போராட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "எங்கள் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. இதுபோன்ற ஒரு தன்னெழுச்சியான மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், உண்மையில் என்ன நடந்தது என்பதை மட்டும் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், இங்கு ஜனநாயக முறையில் போராட்டம் நடைபெறவில்லை என்றும், நாங்கள் அவருடைய மைக்கைப் பறித்து வெளியே அனுப்பிவிட்டோம் என்றும் கூறுவது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு.
இங்கு நடந்த சம்பவம் குறித்து ஏராளமான காணொளிகள் உள்ளன. என்ன நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன. ஒரு கட்டத்திலும் இங்கிருந்த தோழர்கள் யாரும் அவரிடம் 'மைக்கை கொடுங்கள், வெளியே செல்லுங்கள்' என்று கூறவில்லை. மாறாக, அவர் வெளியே செல்லும்போதுகூட தோழர் இப்ராஹிம், 'ஏன் போகிறீர்கள், வாங்க' என்று அழைத்தது அந்தக் காணொளியிலேயே பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: எங்க ஒளிஞ்சு இருக்கீங்க CM..? SORRY கேக்ககூட துணிச்சல் இல்லையா..? விளாசிய ஸ்டாலின்..!
அவர் பேசத் தொடங்கியபோது, அவரது கருத்துகளில் சில முரண்பாடுகள் இருந்ததால் மாணவர்களும் இளைஞர்களும் அதற்கு எதிர்வினை தெரிவித்தனர். அந்தச் சூழலில் இரு தரப்பையும் அமைதிப்படுத்துவதற்காக நாங்கள் முழக்கங்களை எழுப்பினோம். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் மேடையில் ஏறி, 'இங்கு ஜனநாயக முறையில் அனைவருக்கும் பேசும் உரிமை உண்டு. அவர் பேசட்டும், நாம் பொறுமையாகக் கேட்போம்' என்று இளைஞர்களிடம் எடுத்துரைத்தனர்.
அவருக்கு மீண்டும் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்குள், அவர் வெளியே சென்றுவிட்டு, 'என்னை பேச அனுமதிக்கவில்லை' என்று கூறத் தொடங்கினார்.
இங்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் வந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அதேபோல், டிவிகே கட்சியினரையும் நாங்கள் வரவேற்கிறோம். டிவிகே நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
ஏனெனில், இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை டிவிகேயும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அறிக்கை வெளியிடுவதுடன் மட்டுமல்லாமல், களத்திற்கும் வந்து எங்களுடன் இணைந்து போராட வேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றியை அனைவரும் இணைந்து பெற வேண்டும் என்பதே எங்கள் அழைப்பு.
சனம் ஷெட்டியை ஒரு அரசியல் பேச்சாளராக ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவரை ஒரு திரைப்படக் கலைஞராகவே நாங்கள் மதிக்கிறோம்.
கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், நடிகை ஆண்ட்ரியா, தேவதர்ஷினி உள்ளிட்ட பல திரைப்படக் கலைஞர்களும் மேடையில் பேசிச் சென்றுள்ளனர். அவர்கள் யாரும் தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தவில்லை. யாரையும் தரக்குறைவாகவும் பேசவில்லை.
ஆனால் சனம் ஷெட்டி பேசத் தொடங்கியபோது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து, 'இங்கு மாணவர்கள் யார்? கையை உயர்த்துங்கள்' என்று கேள்வி எழுப்பினார். இது மாணவர்களின் போராட்டம் மட்டுமல்ல; தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், மூத்தவர்கள், திரைப்படக் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அப்படியிருக்க, 'மாணவர்கள் யார்?' என்று கேட்கும் அதிகாரம் அவருக்கு யார் வழங்கியது? இது ஒரு வரம்பு மீறிய செயல்.
அதையும் நாங்கள் பொறுமையாகவே எதிர்கொண்டோம். பின்னர், 'பாஜகவைச் சேர்ந்தவர்கள் யார்? கையை உயர்த்துங்கள்' என்றும் அவர் கேட்டார். அதற்கும் சிலர் கைகளை உயர்த்தினர்.
அதன் பிறகு, 'நான் "ஜனநாயகன்" திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். படம் மிகவும் நன்றாக இருக்கிறது' என்று கூறினார். அதற்கு மக்கள் கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர். ஆனால், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, 'இப்போது எனக்கு உற்சாகம் கொடுக்கிறீர்கள்; நான் வெளியேறும்போது என்னை விமர்சிப்பீர்கள்' என்று கூறத் தொடங்கினார்.
அந்தப் பேச்சு போராட்டத்தின் நடுவே தேவையற்ற பதற்றத்தையும் சிக்கலையும் உருவாக்கியது. அதன் காரணமாகவே கீழே இருந்தவர்களிடமிருந்து 'கோ பேக் சனம் ஷெட்டி' என்ற முழக்கம் எழுந்தது. அந்தச் சூழலை உருவாக்கியதும் அவருடைய பேச்சுதான்.
அவர் தனது அரசியல் கருத்துகளைப் பேசக்கூடாது என்று யாரும் கூறவில்லை. ஆனால், அதை நாகரிகமான முறையில் பேச வேண்டியது அவசியம். மாணவர்களிடம் கேள்வி கேட்கும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது? மாணவர்கள் கேள்வி கேட்டால் அவர் பதில் சொல்லத் தயாரா? அல்லது அவர் சார்ந்தவர்கள் பதில் சொல்லப் போகிறார்களா? கேள்வி கேட்டால் அதற்குப் பதிலும் சொல்ல வேண்டும். அதற்கு தயாராக இல்லையென்றால், மாணவர்களிடம் கேள்வி கேட்கும் உரிமையை அவர் எவ்வாறு எடுத்துக்கொண்டார்? அதுவே எங்கள் கேள்வி.
இதுபோன்ற சிக்கல்களை உருவாக்கும் நோக்கத்துடன்தான் அவர் திட்டமிட்டு வந்தாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு வலுவாக இருக்கிறது. நேற்றைய தினம் இந்த நிகழ்வுகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. பல அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்படக் கலைஞர்களும் இந்த மேடையில் உரையாற்றியபோது எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் சனம் ஷெட்டி பேசியபோதுதான் சிக்கல் ஏற்பட்டது என்றால், அதற்கான பொறுப்பு அவருக்கே உரியது; இங்கிருந்த போராட்டக்காரர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.
அவர், 'நான் பேசவா? அல்லது போகவா?' என்று கேட்டபோது, சிலர் 'நீங்கள் போங்கள்' என்று கூறினர். அந்தக் கேள்வியை அவரே எழுப்பியதால், அதற்கேற்ப பதில் கூறப்பட்டது. பின்னர் அவர், 'இல்லை, நான் போக மாட்டேன்' என்றார். அதற்கு, 'நீங்கள்தானே போகிறேன் என்று சொன்னீர்கள்; இப்போது ஏன் போக மாட்டேன் என்கிறீர்கள்?' என்று கேட்டனர்.
அதற்கு அவர், 'இல்லை, நான் பேசுவேன்' என்றார். ஆனால் அப்போது, 'இங்கு தேவையில்லாத கூச்சலும் குழப்பமும் உருவாகிறது. போராட்டத்தின் அமைதி குலைந்து கலவரம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்தச் சூழலை நிறுத்த வேண்டும். தயவுசெய்து பேசாமல் அமைதியாக அமருங்கள்' என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர், 'நான் பேச மாட்டேன்; நான் கிளம்புகிறேன்' என்றார். 'அது உங்கள் விருப்பம்' என்று கூறி அவரை அனுப்பிவைத்தோம்." எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!