நாதகவிற்கு திருப்பம் தருமா திருச்சி?... பிப்ரவரி 7ம் தேதி அதிரடியாய் களமிறங்கும் சீமான்...!
பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப் போகிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வகை, வகையாய் மாநாடுகளை அறிவித்து வருகிறார். சமீபத்தில் தருமபுரியில் மலைகளின் மாநாட்டை நடத்தினார். அதன்பிறகு தூத்துக்குடியில் கடல் மாநாடு, நவம்பர் 15ம் தேதி அன்று தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
தற்போது திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி நாம் தமிழர் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய சொந்தங்களுடன் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடினார்.
அதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், மக்கள் கேள்விகளை கேட்கும் பொழுது பதில் இருப்பவர்கள் தான் மக்களை சந்திக்க முடியும்.நாங்கள் மக்களின் குறைகளை தீர்க்க வந்ததால் இது போன்ற கூட்டங்களை நடத்துகிறோம். எங்களின் உறவுகளாக அனைவருமே இருப்பதால் நாங்கள் துணிந்து மக்களின் பிரச்சினைகளை கேட்கிறோம்.
எந்த ஒரு கருத்துக்களையும் முன் வைக்கும் போது மக்கள் ஏற்பார்கள் ஏற்க மாட்டார்கள் அருவருப்பார்கள் எடுத்துக்கொண்டு கருத்தை முன் வைக்க முடியாது.மனிதன் இல்லாமல் மரம் வாழ்ந்து விடும் மரம் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது.இதையெல்லாம் கற்றுக் கொடுக்காமல் என் மக்கள் எனக்கு ஓட்டு போட்டு என்ன செய்யப் போகிறார்கள்.மரம் என்னுடைய உயிர். மரக்கன்றுகள் நடவு செய்தால் நான் மதிப்பெண் வழங்குவேன் என்று சொன்னதும் சிரித்தார்கள்.
வருகின்ற 15ஆம் தேதி தண்ணீர் மாநாடு நடத்த இருக்கிறோம். அது உங்களிடம் பேசும்.சமூக குற்றத்தை அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக அரசு மாற்றி உள்ளது. இயற்கை வளங்களை விற்று கொண்டிருந்தால் நாடு பாலைவனமாக மாறிவிடும்.மலையை அறுத்த உடனே என் தாயின் மாரை அறுப்பது போல எனக்கு இருக்கிறது.எனக்கு தூக்கம் வரவில்லை.
தமிழகத்தில் 150 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறேன்.திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன். திருச்சியில் மாநாடு நடந்தால் திருப்பம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, அது மத்திய பகுதியாக இருப்பதால் அங்கே நடத்துகிறேன். திருப்பம் சிந்தனையில் தான் இருக்கிறது.