×
 

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்!! ஒரு கிலோ தங்கம் தருவேன்!! வாக்குறுதிகளில் விளையாட்டு காட்டும் சீமான்!!

''வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

“வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்” என்று சீமான் கூறினார். இந்த வார்த்தைகள் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தன. அவர் மேலும் பேசுகையில், “நான் சொல்வது காதில் தேன் ஊற்றுவது போல் இனிக்கிறதா? ‘நீ எப்படி தர முடியும்?’ என்று என்னிடம் கேட்க முடியுமா? மற்ற கட்சிகள் 2,000 அல்லது 3,000 ரூபாய் கொடுப்பதாகவும், இலவச சிலிண்டர் தருவதாகவும் சொல்கின்றன. அதேபோல் நானும் கொடுப்பேன்” என்றார்.

இலவசங்கள் குறித்து கடுமையாக விமர்சித்த சீமான், “வேலை இல்லையா? 4,000 ரூபாய் தருகிறேன். படிப்புக்கு 20 லட்சம் கல்விக் கடன் தருகிறேன் என்று அள்ளி விடுகின்றனர். ஆனால் நான் சொல்வது வேறு. சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்கி தருவேன். மதுக்கடையை மூடுவேன். மதுக்கடையை மூடாமல் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: சீமானின் சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி!! ரூ. 5.11 லட்சம் கடன்!! 24 நிலுவை வழக்குகள்!!

மேலும், “பொது இடங்கள் தவிர மற்ற அனைத்து வணிக வளாகங்களிலும் தமிழில் மட்டுமே பெயர் இருக்க வேண்டும். அனைவரும் தூய தமிழில் பேச வேண்டும் என்பதை கட்டாயமாக்குவேன்” என்று உறுதியளித்தார். அரசியலில் நல்லவர்களை வரவிடாமல் தடுக்கப்படுவதாகவும், டெல்லியில் கெஜ்ரிவால் போன்றோர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார்.

காரைக்குடியில் தேவர் சிலை அருகே நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில் சீமான் இரவு 10:10 மணி வரை பேசினார். தேர்தல் ஆணையம் விதிப்படி இரவு 10 மணிக்குப் பிறகு பிரசாரம் செய்யக் கூடாது என்பதால், விதிமீறல் என்று கூறி, கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சீமானின் இந்த பிரசாரம் காரைக்குடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவசங்கள், தமிழ் மொழி பாதுகாப்பு, மதுக்கடை மூடல் உள்ளிட்ட விவகாரங்கள் மக்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் இந்த அதிரடி பேச்சு அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share