விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!
கூவத்தூரில் நடந்தது பற்றி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரோட்டில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஜெயலலிதா மறைந்தபோது கூவத்தூரில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
“ஜெயலலிதாவுக்கு பிறகு நான்தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும். ஏமாந்து விட்டேன். விடியும் வரை நான் தான் முதல்வர். காலையில் தான் காட்சி மாறிவிட்டது” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.
செங்கோட்டையன் மேலும் கூறியதாவது: “அந்த ஆள் கையில் பெட்டி இருந்தது. என் கையில் பெட்டி இல்லை. காலையில் பார்த்தேன், சசிகலா என்னிடம் கேட்டார்கள். சரி பரவாயில்லை, யாரோ ஒரு ஆள் இருந்துட்டு போகிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!
அந்த அம்மா (சசிகலா) ‘நீங்கள் செங்கோட்டையன் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நான் ‘கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொன்னேன். அப்போது அந்த அம்மா ‘நீங்கள் தான் முதல்வர் வேட்பாளர், செங்கோட்டையனும் சொல்லிவிட்டார். கவலையில்லை’ என்று என் தோளைத் தட்டி பிடித்தார்கள். உடனே மலைப்பாம்பு போல காலில் விழுந்து விட்டார்” என்று விவரித்தார்.
ஜெயலலிதா மறைந்த 2016 டிசம்பர் மாதம் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகவும், இரவு வரை அவருக்கு ஆதரவு இருந்ததாகவும், ஆனால் காலையில் சூழல் மாறி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். தனக்கு வர வேண்டிய பதவி கடைசி நிமிடத்தில் கைவிட்டுப் போனது பற்றி அவர் வருத்தத்துடன் பேசினார்.
செங்கோட்டையன் தற்போது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஈரோடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பழைய அதிமுக உள் குழப்பங்கள் மற்றும் முடிவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். இந்தப் பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வுகள் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, சசிகலா-எடப்பாடி இடையேயான போட்டி உள்ளிட்டவற்றை மீண்டும் நினைவூட்டுகின்றன. செங்கோட்டையன் தனது அரசியல் பயணத்தில் பல முக்கிய தருணங்களை சந்தித்தவர். தற்போது த.வெ.க. தலைவர் விஜய்யுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அவரது இந்தக் குமுறல், தமிழக அரசியலின் பழைய அத்தியாயங்களை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், மூத்த அரசியல்வாதிகளின் இத்தகைய தனிப்பட்ட அனுபவப் பகிர்வுகள் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கின்றன.
இதையும் படிங்க: பழக்க தோஷம்ப்பா... வாய் தவறி இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்..!