×
 

செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

செந்தில் பாலாஜிக்கு உதவியாளராக இருந்தவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது

தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்று பார்த்தோமென்றால், மின்சார வாரியத்தில் அலுமினியம் கண்டக்டர் எனப்படக்கூடிய மின் கடத்தியை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் முறைகேடு தொடர்பாகத்தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, டான்ஜெட்கோ சார்பில் மின் கடத்தி கொள்முதல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட 9 டெண்டர்களில் சுமார் ரூ.1,028 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டபோதே அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: #BREAKING செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சகோதரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்...!

இந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை கையில் எடுத்து, தமிழகம் முழுவதும் 51 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த டான்ஜெட்கோ மின் கடத்தி கொள்முதல் நடவடிக்கைக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் மின்வாரிய அதிகாரிகள், அதேபோன்று தனிநபர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணாநகரில் 3 இடங்கள், தேனாம்பேட்டையில் ஒரு இடம், பெருங்குடியில் 4 இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காசி என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் யார் என்று பார்த்தோமென்றால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவருடைய உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே காசி என்பவருடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், அதேபோன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையும் இந்த வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகிறது.

இந்த மின் கடத்தி கொள்முதல் டெண்டர்களில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அந்த டெண்டரில் முறைகேடு நடைபெற்றிருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியாகும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share