×
 

Breaking News! செந்தில் பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டில் அதிர்ச்சி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் மோசடி நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், இந்த வழக்கு மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், டெண்டர் ஒதுக்கீடு மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. "பார்ட்டி பண்ட்" என்ற பெயரில் தனியாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஒரே நேரத்தில் 41 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்பட ஆறு இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் பணப்பட்டுவாடா?! ஆர்.டி.ஐ. ஆவணங்கள் வெளியீடு! செந்தில் பாலாஜி மீது புதிய புகார்!

இந்த விசாரணையைத் தொடர்ந்து, டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் மோசடி நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் ஆவணங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும், அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் முன்ஜாமின் கோரப்படுகிறது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share