கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!
ஏற்கனவே திமுக சார்பில் கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார்.
இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது, அந்தத் தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, கட்சியின் தற்போதைய நிலை என்ன, அங்கு திமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தாராபுரத்தைப் பொறுத்தவரை, அது கொங்கு மண்டலத்தின் முக்கியமான பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியிலிருந்து கோவை தெற்கு தொகுதிக்கு அவர் மாற்றப்பட்டு போட்டியிட்டார். கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜி கருதப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு செந்தில் பாலாஜி அழைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏன் அழைக்கப்படவில்லை என்பது குறித்து திமுக வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.
கொங்கு மண்டலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், இதுவரை தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜியே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.