×
 

அமைச்சர் நேருவுக்கு கிடுக்குப்பிடி!! விசாரணையை துவங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை!! பறக்கும் உத்தரவு!

அமலாக்கத்துறை அனுப்பிய புகார் கடிதங்களின் அடிப்படையில், அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடங்கியுள்ளனர்.

சென்னை: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமலாக்கத்துறை (ED) அனுப்பிய இரு புகார் கடிதங்களின் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை (DVAC) விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.

அமலாக்கத்துறை, கடந்த 2025 அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழக காவல்துறை தலைவருக்கு (டிஜிபி) இரு கடிதங்களை அனுப்பியது. முதல் கடிதத்தில் (அக்டோபர் 2025), நகராட்சி நிர்வாகத்துறையில் பணியாளர் தேர்வுகளில் லட்சக்கணக்கில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், சுமார் 888 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டாவது கடிதத்தில் (டிசம்பர் 3, 2025), துறையின் ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், ஒப்பந்ததாரர்களிடம் 7.5% முதல் 10% வரை கமிஷன் வசூலிக்கப்பட்டு சுமார் 1,020 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: முறைகேடா ரூ.1,020 கோடி சம்பாதிச்சிருக்காரு நேரு?! இவ்ளோ ஆதாரம் இருக்கு! ஏன் கேஸ் போடல! அண்ணாமலை கேள்வி?

இந்த கடிதங்களுடன், அமலாக்கத்துறை சோதனைகளில் கிடைத்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களில் உள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள், புகைப்படங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை இணைத்து அனுப்பியது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் நகலை அமலாக்கத்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இக்கடிதங்களைப் பெற்ற தமிழக டிஜிபி, அவற்றை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு ஆய்வு செய்த பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, DVAC அதிகாரிகள் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். இது முதற்கட்ட விரிவான விசாரணை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளியானதும், அமைச்சர் நேரு அவற்றை மறுத்து அறிக்கை வெளியிட்டார். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரம் என்றும், திராவிட மாடல் அரசின் சாதனைகளை மறைக்கும் முயற்சி என்றும் அவர் கூறினார். தனது துறையில் சாலை அமைப்பது, குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல சாதனைகள் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை இக்குற்றச்சாட்டுகளைப் பெரிதுபடுத்தி வருகின்றன. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்துகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இச்சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ. 4 லட்சம் கோடியை அமுக்கிய திமுக!! எந்தெந்த துறையில் எவ்வளவு பணம் ஊழல்! எடப்பாடி வெளியிட்ட பட்டியல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share