தமிழக ரயில் திட்டங்களுக்கு நிலம் தருவதில் தாமதம்! ரயில்வே அமைச்சகம் குற்றச்சாட்டு!
தமிழக ரயில் திட்டங்களுக்கு 11,391 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், மாநில அரசு 2,910 ஏக்கர் மட்டுமே ஒதுக்கியுள்ளதால் திட்டப்பணிகள் தாமதமாவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 11,391 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், மாநில அரசு இதுவரை 2,910 ஏக்கர் நிலத்தை (26%) மட்டுமே கையகப்படுத்தி வழங்கி உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாகத் தமிழகத்தில் பல புதிய ரயில் பாதை திட்டப்பணிகள் தாமதமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல்கள் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 8 புதிய பாதைகள், 3 அகலப்பாதைகள், 8 இரட்டைப் பாதை திட்டங்கள் என மொத்தம் ரூ. 27,282 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 7,611 கோடி கணிசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் தாமதம் குறித்துத் தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்ததாவது. தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு 11,391 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், இதுவரை 26 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!
இதன் காரணமாக திண்டிவனம் – திருவண்ணாமலை (71 கி.மீ.), அத்திப்பட்டு – புத்தூர் (88 கி.மீ.), மொரப்பூர் – தர்மபுரி (36 கி.மீ.), மன்னார்குடி – பட்டுக்கோட்டை (41 கி.மீ.), தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை (52 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்டப் பணிகள் பல ஆண்டுகளாகத் தாமதமாகி வருகின்றன.
இதில் அத்திப்பட்டு – புத்தூர், மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை ஆகிய 3 புதிய திட்டங்களுக்கு இதுவரை ஒரு சதுர அடி நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. எனவே, திட்டங்களை விரைந்து முடிக்கத் தமிழக அரசு போதிய நிலங்களைக் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!