தமிழக அரசியலில் மெகா திருப்பம்.. இபிஎஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த எஸ்.பி.வேலுமணி... பதவி பறிபோன மறுநாளே திடீர் மாற்றம்...!
எடப்பாடி பழனிசாமி அழைத்தால் பேச்சு வார்த்தைக்கு தயார் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தற்போது அழைத்தாலும் பேச நாங்கள் தயார் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார். இபிஎஸ்ன் பிரச்சார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்து பேசவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி அழைத்தால் பேச்சு வார்த்தைக்கு தயார் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பதிவில் தெரிவித்துள்ளதாவது: கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.
ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.
இதையும் படிங்க: அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை..!! சசிகலா, டிடிவி-யை இணைக்க வேண்டும்..!! எஸ்.பி.வேலுமணி விருப்பம்..!!
ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.
இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்-
“போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!!. எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!
இதையும் படிங்க: தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு... சட்டசபையில் சலசலப்பு..!!