ரூ.3,000 கோடி வங்கி மோசடி! அனில் அம்பானியை தொடரும் சிக்கல்! சிறப்பு குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!
தொழிலதிபர் அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொழிலதிபர் அனில் அம்பானி மீதான வங்கி மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் பெரும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறை (ED) மூலம் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனில் அம்பானி (வயது 66) ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆவார். அவரது 'ராகாஸ்' (Reliance ADA Group) நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி சுமார் 3,000 கோடி ரூபாய் கடன் கொடுத்தது.
ஆனால் ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க: 24 மணி நேரமும் மக்களுக்கான அரசு... உன்னிப்பா கவனிச்சுட்டு வரோம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!
சிபிஐ (CBI) இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. மொத்தம் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக கூறப்பட்டது. அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. வங்கி கணக்கு தணிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கடன் தொகையை வேறு நோக்கங்களுக்கு தவறாக பயன்படுத்தியது உறுதியானது.
இந்த வழக்கு பிப்ரவரி 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனில் அம்பானி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி ஆஜராகி, “நீதிமன்ற அனுமதி இல்லாமல் அனில் அம்பானி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார்” என்று உறுதி அளித்தார்.
ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்த்து, “டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் தப்பி ஓடமாட்டார் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்” என்று கூறினார். இதனால் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அனில் அம்பானி மீதான வங்கி மோசடி வழக்கை விசாரிக்க அமலாக்கத் துறை சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. விசாரணையை விரைவாகவும் நியாயமாகவும் முடிக்க வேண்டும் என்றும் கூறியது. வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த உத்தரவு அனில் அம்பானி குழுமத்தின் மீதான பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. யெஸ் வங்கி கடன் தொடர்பான மோசடி, பணம் தவறாக பயன்படுத்தியது போன்றவை இப்போது SIT மூலம் ஆழமாக விசாரிக்கப்படும். இது பெரிய தொழிலதிபர்கள் மீதான விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!