×
 

தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட பணிகள் தீவிரம்! முழு வீச்சில் நடக்கும் பார்சல் அனுப்பும் பணி!

திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில் மோதிரங்கள் பேக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பைகளில் ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயரும் தெளிவாக இடம்பெற்றுள்ளது.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்க தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட தங்க மோதிரங்களை ஒப்பந்தம் பெற்ற நகை நிறுவனங்கள் அனுப்பத் தொடங்கியுள்ளன.

அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.2,560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, தேவையான இடங்களுக்கு விநியோகிப்பதற்காக மாநிலம் முழுவதும் 107 மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பெட்டகங்கள் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!

இந்நிலையில், திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள நகை நிறுவனங்கள் மோதிரங்களை தயாரித்து அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளன. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் முதல் கட்டமாக 89,955 தங்க மோதிரங்களை தயாரித்து வழங்கும் பணியை பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில் மோதிரங்கள் பேக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பைகளில் ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயரும் தெளிவாக இடம்பெற்றுள்ளது. சென்னை மற்றும் கோவையில் உள்ள நிறுவனத்தின் இரண்டு பிரத்யேக மையங்களில் பேக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப தங்கத்துக்கான தொகையை செலுத்துவதாகவும், மோதிரங்களை தயாரித்தல், ஹால்மார்க் முத்திரையிடுதல், பாதுகாப்பான பேக்கிங் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த நிறுவனமே மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 முதல் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான இந்த புதிய திட்டம் பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share