டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml 'டெட்ரா பேக்' விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!
கடந்த ஆட்சியில், கடைசி நேரத்தில் மதுபான ஆலைகளுக்கு ஆதரவாக கைவிடப்பட்ட, குறைந்த விலை மது விற்பனையை, தற்போது செயல்படுத்த, அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் குறைந்த விலையில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக மீண்டும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட 90 மில்லி டெட்ரா பேக் மதுபான விற்பனை திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசு தரப்பில் ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலர் உயிரிழந்த சம்பவங்கள் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், குறைந்த வருமானம் கொண்ட சிலர் விலை உயர்ந்த மதுபானங்களை வாங்க முடியாத காரணத்தால் மலிவான கள்ளச்சாராயத்தை நாடியதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறைந்த அளவு மற்றும் குறைந்த விலையில் சட்டபூர்வமாக மதுபானம் கிடைக்கச் செய்வதற்காக டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி டெட்ரா பேக் மதுபானங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் கடந்த ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த திட்டம் இறுதியில் நடைமுறைக்கு வரவில்லை.
இதையும் படிங்க: பணிச்சுமையால் அரங்கேறிய விபரீதம்... ஆரணியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை...!
தற்போது டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டமும் மீண்டும் பரிசீலனைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. டெட்ரா பேக் வடிவில் குறைந்த அளவு மதுபானம் விற்பனை செய்யப்பட்டால், அதிக கொள்ளளவு கொண்ட மதுபானங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தால் சில தரப்புகள் முன்பு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் சிலவும் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும், குறைந்த விலையில் சட்டபூர்வமான மதுபானம் கிடைத்தால் கள்ளச்சாராய பயன்பாட்டை குறைக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், 90 மில்லி டெட்ரா பேக் மதுபான விற்பனையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம் சமூக, அரசியல் மற்றும் பொதுச் சுகாதார வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!