×
 

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்! கைவிடுகிறது தவெக அரசு! ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்திவைக்க பரிசீலனை!

வீடுகளில் ஆளில்லாமல், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை கைவிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை: வீடுகளில் மின் பயன்பாட்டை தானாக கணக்கெடுக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை தமிழக அரசு முழுமையாக கைவிட்டுள்ளது. இந்த முடிவு மின் வாரியத்தின் பெரிய திட்டங்கள் சிலவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள மீட்டர்களை பணியாளர்கள் நேரில் சென்று படிக்கும் முறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், ஆளில்லாமல் தானாக மின் பயன்பாட்டை கணக்கிட்டு, மொபைல் மூலம் நுகர்வோருக்கு பில் அனுப்பும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை தமிழக மின்வாரியம் கொண்டு வரத் திட்டமிட்டது. இந்த மீட்டர்களில் தேதி மற்றும் பிற விவரங்கள் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைத்தொடர்பு வசதி மூலம் தானாக தகவல்கள் அனுப்பப்படும்.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை ஆறு தொகுப்புகளாக பொருத்தவும், 93 மாதங்கள் பராமரிக்கவும் 2025 மார்ச் மாதம் டெண்டர் அழைக்கப்பட்டது. மொத்த திட்ட மதிப்பு 20,000 கோடி ரூபாயாகும். 50 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. தொழில்நுட்ப புள்ளிகள் திறக்கப்பட்டு, விலைப்புள்ளி திறக்கும் நிலையில் இருந்தது.

இதையும் படிங்க: மாதந்தோறும் மின்கட்டண முறை எப்போது! மின்சார அமைச்சர் நிர்மல்குமார் க்ளியர்கட் பதில்!

இந்நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, மின் வாரியத்தில் முறைகேடு புகார்கள் அடிப்படையில் பல டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக 2,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாகக் கைவிட அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ரத்து செய்யப்படுவது மின் வாரியத்தின் வருவாய் மற்றும் நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலன் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, தற்போதைய நிதிநிலைமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து மின் நுகர்வோரிடையே கலவையான கருத்துகள் நிலவுகின்றன.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக வசூலிப்பு!! 277 பேரை தட்டித்தூக்கியது காவல்துறை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share