×
 

அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

'தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில், முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் மற்றும் மத நிறுவனங்களின் நிதி பாதுகாப்பாக இருக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய வழக்கு ஒன்றில் தமிழக அரசு முக்கிய உத்தரவாதம் அளித்துள்ளது. கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களின் உபரி நிதியை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்பின்) உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் அறநிலையத் துறை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், கோவில் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அறநிலைய சட்டத்துக்கு முரணாக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கோவில் நிதியை முதலீடு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வி.பாலசுப்பிரமணியம் ஆஜராகினர். 

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்! சொத்துக்களை இழக்க நேரிடும்! ஹைகோர்ட் எச்சரிக்கை!

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “பவர்பின் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் மற்றும் மத நிறுவனங்களின் நிதி முழுமையாக பாதுகாப்பாக உள்ளது. இதுவரை உரிய வட்டி முறையாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே முதலீட்டின் பாதுகாப்பு குறித்து எந்த அச்சமும் தேவையில்லை” என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் அரசின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இந்த விவகாரம் தமிழகத்தில் கோவில் நிர்வாகம் மற்றும் நிதி முதலீடு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் நிதி பாதுகாப்பாக இருப்பதாக உறுதி அளிக்கப்பட்டாலும், மனுதாரர் தரப்பில் கோவில் நிதியை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்வது சரியல்ல எனும் வாதம் தொடர்கிறது. 

கோவில் வருமானத்தைப் பாதுகாத்து, அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த வழக்கின் இறுதி முடிவு கோவில் நிதி மேலாண்மை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு அளித்த உத்தரவாதம் தற்காலிகமாக நிம்மதியை அளித்தாலும், வழக்கின் முழு விசாரணைக்குப் பிறகுதான் இறுதி முடிவு தெரியவரும். 

இதையும் படிங்க: நீதிமன்ற அதிகாரியை காக்க வைத்ததால் வினை! நாள்முழுவதும் கோர்ட்டில் காத்திருந்த ஐபிஎஸ் அருண்! பரபரப்பு பின்னணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share