×
 

நவோதயா பள்ளிகளுக்கு நிலம் தர முடியாது? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு வாதம்!

நிலம் தொடர்பான கொள்கை, நில மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கில், மாநில அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடையாளம் காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், நவோதயா பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து தமிழக அரசு தனது விரிவான பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது.

அதில், கல்வி அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், கல்வி தொடர்பான கொள்கைகளை வகுப்பதிலும் சட்டங்களை உருவாக்குவதிலும் மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் கற்றல் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்க்குகளில் இனி ‘கூகுள் பே’ கிடையாது? தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு திடீர் சிக்கல்!

மாநிலத்தின் சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் முரணான மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளை தமிழகத்தில் கட்டாயமாக செயல்படுத்த முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவோதயா பள்ளிகளை அமைக்கவும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும் மாநில அரசை மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது எனவும் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், நிலம் தொடர்பான கொள்கை, நில மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது. எனவே, நவோதயா பள்ளிகளுக்காக நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,109.90 கோடி நிதி இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த நிதி கிடைத்தால் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால், நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றம் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share