நேபாள வெள்ளம்: முதல்வர் விஜய் உத்தரவில் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட 4 அமைச்சர்கள்! முக்கிய முடிவு?
நேபாளத்தில் தொடர்ந்து நிலவும் பேரிடர் சூழல், காணாமல் போன தமிழர்களை கண்டறியும் நடவடிக்கைகள், மீட்கப்பட்டவர்களை தமிழகம் அழைத்து வருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகள் தொடர்பாக, டெல்லியில் தமிழக அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் விஜய் நியமித்துள்ள 4 அமைச்சர்கள் கொண்ட குழு, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 103 தமிழர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டறிந்து பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 21 தமிழர்கள் உள்பட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தமிழர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இன்னும் பல இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் நிலை குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்காததால் அவர்களை தேடும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செயற்கை ஏரி உடையும் அபாயம்?! நேபாளத்தில் மீட்புப் பணி நிறுத்தம்! வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை?
இந்த நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகிய 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழர்களை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சர்கள் குழுவினர் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர். அங்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும் அமைச்சர்கள் குழுவினர் நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தனர். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக இல்லத்தில் தற்போது 4 அமைச்சர்கள் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. நேபாளத்தில் தொடர்ந்து நிலவும் பேரிடர் சூழல், காணாமல் போன தமிழர்களை கண்டறியும் நடவடிக்கைகள், மீட்கப்பட்டவர்களை தமிழகம் அழைத்து வருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெள்ள அபாய எச்சரிக்கையால் சில பகுதிகளில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. காணாமல் போன தமிழர்களை விரைவாக கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதே தற்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் முக்கிய கவனமாக உள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!