இனி அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை வரும்! திமுகவை விஜய் ஒழித்துக் கட்டிவிட்டார்! அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்!
ஒவ்வொரு ஆண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேசிய அரசியல் விமர்சனங்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் திமுகவின் அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலைக்கு அந்த கட்சி சென்றுவிடும் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய நிர்மல் குமார், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கிவிட்டதாக தெரிவித்தார். திமுகவை தனியாக பழிவாங்க வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை என்றும், அந்த கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்களை பார்த்த மக்களே தங்களது முடிவை தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்ததை சுட்டிக்காட்டிய நிர்மல் குமார், அந்த அரசியல் எதிர்ப்பின் தொடர்ச்சியாகவே அதிமுக உருவானதாக குறிப்பிட்டார். ஆனால், தற்போது திமுகவை வீழ்த்தும் அரசியல் சக்தியாக விஜய் தலைமையிலான தவெக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவையே ஆளப்போகும் சக்தி முதல்வர் விஜய்தான்! வேறு யாராலும் முடியாது! செங்கோட்டையன் கணிப்பு
இதன் தொடர்ச்சியாக திமுகவின் அண்ணா அறிவாலயத்தை கடுமையாக விமர்சித்த அவர், இனி வரும் காலங்களில் அந்த கட்சி அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை ஏற்படும் என்று கூறினார். மேலும், முரசொலி அறக்கட்டளை தொடர்பாகவும் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அறக்கட்டளையின் சொத்துகளை யார் கைப்பற்றுவது என்பதுதான் திமுகவில் போட்டியாக இருப்பதாக நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். அறக்கட்டளையை கைப்பற்றிய பிறகு அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கச் செல்லும் நிலை வரும் என்றும் அவர் பேசினார்.
தவெக ஆட்சிக்கு வந்தால் அது மக்களுக்கான அரசாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்தார். ஒவ்வொரு ஆண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
திமுகவை குறிவைத்து தவெக நிர்வாகிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை ஏற்படும் என்ற நிர்மல் குமாரின் பேச்சு அரசியல் அரங்கில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தரப்பில் வெளியாகும் பதில் அடுத்தகட்ட அரசியல் விவாதத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!