தமிழக தேர்தல் ஏற்பாடுகள் எப்படி? பாதுகாப்பு போதுமா? தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனல் பறக்கும் பிரசாரத்துக்கு இடையே, தேர்தலை சுமுகமாகவும், அமைதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, ரேம்ப் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக, பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 3,322 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் முழுமையாக சிசிடிவி கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படுகின்றன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள், நுண்பார்வையாளர்கள் மற்றும் போலீசார் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!! கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!
இந்த நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி வாயிலாக நடைபெற்று வரும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்றுள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள், பறக்கும் படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆயுதங்கள், மதுபானங்கள், தேர்தல் பாதுகாப்பு, வாக்குச்சாவடி வசதிகள், EVM இயந்திரங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அச்சமின்றி, இடையூறின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்குவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நாளன்று சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான தேர்தலாக இது அமையும் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை அச்சமின்றி பயன்படுத்த வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் 4ம் கட்ட சுற்றுப்பயணம்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!! திமுக உற்சாகம்!