×
 

பள்ளி மாணவர்களிடம் பல கோடி வசூல்! வினாத்தாள் கட்டணம்! ஆக்‌ஷன் எடுப்பாரா முதல்வர் விஜய்!!

கல்வித்துறையில் பள்ளி மாணவர்களிடமும் ரூ. கோடிகளில் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டண நடைமுறையை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்பார்க்கின்றனர்.

தமிழக பள்ளி மாணவர்களிடம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டணத்தை முதல்வர் விஜய் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், பேக் உள்ளிட்ட 21 வகை நலத்திட்டங்களை இலவசமாக வழங்கி வருகிறது. பெற்றோர் ஆசிரியர் இணைப்பு கட்டணமாக ரூ.50 மட்டுமே வசூலிக்க அனுமதி உள்ள நிலையில், 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் தொகை பெறப்படுகிறது.

6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.80, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.100, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. மாவட்டத்துக்கு ஏற்ப இந்தத் தொகை ரூ.10 முதல் ரூ.20 வரை மாறுபடுகிறது.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்!! 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட்! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!

இந்தக் கட்டணத்தின் மூலம் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தனியார் நிறுவனங்களிடம் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வசூலாகும் நிலையில், 38 மாவட்டங்களிலும் சேர்த்து பல கோடி ரூபாய் இந்தப் பெயரில் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகள் வரை மறைமுகக் கமிஷன் பகிரப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெற்றோர்கள் சிலர் கூறுகையில், “தொடக்கக் கல்வியில் அரசே வினாத்தாள் செலவை ஏற்கிறது. ஆனால் 6ஆம் வகுப்பு முதல் மாணவர்களிடமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநில அளவில் ஒரே வினாத்தாள் முறையை அமல்படுத்தாமல் மாவட்டம் வாரியாக செய்வதாகக் கூறி இந்த வசூல் தொடர்கிறது. மாணவர்களுக்கு இலவசப் பலன்கள் அளிக்கும் அரசு இந்தச் சிறிய தொகையையும் ஏற்க வேண்டும்” என்றனர்.

கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு ஆசிரியர்களே முன்பணம் கொடுத்து பின்னர் வசூலிக்க வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஜூன்-ஜூலை மாதங்களில் இந்த வசூலுக்கு அதிகாரிகள் தனி ஆர்வம் காட்டுவதாக பெற்றோர்கள் விமர்சிக்கின்றனர்.

மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்கும் வகையில் வினாத்தாள் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து, அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. புதிய அரசு மக்கள் நலன் சார்ந்த இந்த முடிவை விரைவில் எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பினாமிகள் மூலம் டெண்டர் முறைகேடு! முதல்வர் விஜய் ஸ்மார்ட் முவ்! சிக்கப்போகும் தலைகள்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share