கோவில் நிலங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்? இதுவரை 19 பேர் கைது! அமைச்சர் ரமேஷ் பரபரப்பு தகவல்!
கோவில்களுக்குள் பக்தர்கள் மொபைல் போன்களை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் முதல் நிலை கோவில்களில் மொபைல் போன் பாதுகாப்பு கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
திருச்சி திருவரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில் சொத்துகள் மற்றும் அறக்கட்டளை நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில், கோவில்களுக்குள் மொபைல் போன்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
திருவரங்கத்தில் கோபுரம் திறப்பு நிகழ்ச்சி நிர்வாக ரீதியாக சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்த அமைச்சர், கோவில் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அவற்றின் நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
சில இடங்களில் கோவில் நிலங்கள் வழங்கப்பட்டதற்கான உண்மையான நோக்கத்தை மறைத்து, அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் முறைகேடான முறையில் பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற தகவல்கள் கிடைத்தவுடன் நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயில்களில் VIP கலாசாரத்திற்கு செக்? அமைச்சர், எம்எல்ஏக்களுக்கும் கட்டுப்பாடு! போட்டோ, வீடியோ எடுக்க தடை!
பழனி கோவில் நில விவகாரத்தையும் குறிப்பிட்ட அமைச்சர், நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் தனிநபர்கள் பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த விவகாரத்தில் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
இதற்கிடையே, கோவில்களில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்குள் பக்தர்கள் மொபைல் போன்களை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் முதல் நிலை கோவில்களில் மொபைல் போன் பாதுகாப்பு கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் முதல் நிலை கோவில்களில் இந்த மொபைல் கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கோவிலுக்குள் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த முடியும் என அறநிலையத்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
கோவில் நிலங்களை பாதுகாப்பது முதல் கோவில் வளாகங்களில் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவது வரை அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவில் பக்தர்களுக்கு இனி புதிய வசதிகள்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?