₹5,000 கோடி வரணும்! முதல்வர் விஜய் கொடுத்த அசைன்மென்ட்... டெல்லி பறக்கும் அமைச்சர் ராஜ்மோகன்!
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, 'சமக்ர சிக்ஷா கல்வி நிதி விடுவிக்க கோரி, மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்திப்பதற்காக, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய சமக்ர சிக்ஷா கல்வி நிதியை விடுவிக்கக் கோரி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விரைவில் டெல்லி செல்ல உள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், புதிய பள்ளிகள் தொடங்குதல், ஆசிரியர்கள் நியமனம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்களுக்கான கல்வி வசதிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டத்தில் இணைவதாக தமிழக அரசு உறுதியளித்தது. பின்னர் அந்த முடிவில் இருந்து தமிழக அரசு பின்வாங்கியது. இதையடுத்து, உறுதியளித்தபடி பி.எம். ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுத்து வருவதால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலை உணவு திட்டத்திற்கு தடை?! முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தற்போது தமிழகத்திற்கு சுமார் ₹5,000 கோடி வரை நிதி வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த நிதி கிடைப்பது பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில், சமக்ர சிக்ஷா நிதியை விரைவாகப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சருடன் நேரில் பேசி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரிக்கை வைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் டெல்லி செல்ல உள்ளார்.
இந்த சந்திப்பில், நிலுவையில் உள்ள நிதியை விரைந்து வழங்குவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவு, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டங்களின் அடுத்தகட்ட முன்னேற்றத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கல்வித்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: 30 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்! அரசு மரியாதையுடன் கண்ணீர் அஞ்சலி!