×
 

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் கடிதம்!

மது கடைகளின் நிர்வாக செலவுகளை பணியாளர்கள் மீது சுமத்துவதால், பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக, முதல்வர் விஜய்க்கு, பணியாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை: டாஸ்மாக் மது கடைகளில் பணியாளர்கள் மீது நிர்வாக செலவுகளை சுமத்துவதால் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக முதல்வர் விஜய்க்கு ஏ.ஐ.டி.யு.சி. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என சங்கத் தலைவர் பெரியசாமி மற்றும் பொதுச் செயலர் தனசேகரன் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்கள் விற்கப்படும் நிலையில், அரசு நிர்ணயித்த விலையை விட ₹10 முதல் ₹20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் மது பிரியர்கள் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, புதிய முதல்வர் விஜய் கூடுதல் வசூல் செய்யும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பணியாளர்கள் சங்கம் முதல்வர் விஜய் மற்றும் உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் இரு முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்று, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் ஒரு பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலித்து, பாட்டில் திருப்பித் தரும்போது அதை திரும்ப அளிப்பது. இரண்டாவது, மது கடைகளின் நிர்வாக செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்காமல் பணியாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

மேலும், கேரள அரசு மது கடைகளில் பின்பற்றும் நிர்வாக விதிமுறைகளை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய சங்கம், மது விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிய வேண்டும் என்றும் கோரியது. கணினி மயமாக்கப்பட்ட விற்பனைக்குப் பிறகு கணக்குகளை சரிபார்க்க 30 முதல் 90 நிமிடங்கள் தேவைப்படுவதால், இரவு 10 மணிக்கு மேல் பணியாளர்கள் கடையில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.

தற்போது டி.ஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனர்கள் இரவு 10 மணிக்கு மேல் பணியாளர்கள் கடையில் இருக்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தி வருவது பணியாளர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அரசின் கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் முன்பு பணியாளர்கள் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்தக் கடிதம், டாஸ்மாக் நிர்வாகத்தில் பெரும் மாற்றம் தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இதையும் படிங்க: காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share