மூணாவதும் பெண் குழந்தையா? மனைவி, குழந்தைகளை கொலை செய்த கொடூர கணவன்..!!
தெலங்கானாவில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறக்கும் என நினைத்து மனைவி, குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் நிகழ்ந்த கொடூரமான குடும்பப் படுகொலை சம்பவம் ஒன்று சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், மூன்றாவது குழந்தை பெண்ணாக இருக்கும் என ஸ்கேன் மூலம் சந்தேகித்த கணவர், தனது கர்ப்பிணி மனைவியையும் இரு மகள்களையும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெண் குழந்தை மீதான வெறுப்பு மற்றும் ஆண் குழந்தை மோகத்தின் கொடூரமான வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள புன்னோல் கிராமத்தைச் சேர்ந்த முகமது அஸ்ஹருதீன் என்பவர் இந்தக் கொடூரத்தைச் செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது மனைவி ஃபர்ஹானா ஏற்கனவே இரு பெண் குழந்தைகளைப் பெற்றிருந்தார். மூத்த மகள் உமேரா மற்றும் இளைய மகள் ஆயேஷா. மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஃபர்ஹானா, ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்ஹருதீன், தனது மனைவியையும் மகள்களையும் கொலை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு, அஸ்ஹருதீன் தனது மனைவி மற்றும் இரு மகள்களை அழைத்துச் சென்று, கிராமத்தின் வெளிப்புறத்தில் உள்ள தனியார் லேஅவுட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடி இரவு உணவு அருந்திய பின்னர், அவர்களை குளத்தில் தள்ளி கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் மனைவியைத் தள்ளிய பின்னர், இரு மகள்களையும் குளத்தில் தள்ளியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுநாள் காலையில், அஸ்ஹருதீன் உடல்களை மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, “அவர்கள் நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்து மூழ்கி இறந்துவிட்டனர்” என விபத்து என்று கூறினார். ஆனால், உடல்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் இதை சந்தேகத்துடன் பார்த்தனர்.
இதையும் படிங்க: பெத்தவங்கள கவனிச்சிக்கலையா.. அப்போ சம்பளம் கட்..!! தெலங்கானாவில் வந்தது புதிய சட்டம்..!!
ஃபர்ஹானாவின் தந்தை ஷைக் அலி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணத்திற்கு அஸ்ஹருதீனே காரணம் என போலீசில் புகார் அளித்தார். “மனைவி மூன்றாவது முறை கர்ப்பமாக இருந்தபோது, அஸ்ஹருதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண் குழந்தை பிறக்கும் என சந்தேகித்து கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். ஆனால் ஃபர்ஹானா அதை மறுத்தார். இதனால் ஏற்பட்ட தகராறு கொலைக்கு வழிவகுத்தது” என அவர் கூறினார். போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், அஸ்ஹருதீனின் வாக்குமூலம் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்..! நெஞ்சை பிழிந்த பேருந்து தீவிபத்து... பலி எண்ணிக்கை உயர்வு..!!