கனிம சோதனைக்கான ஆய்வகம் தேவை... முதலமைச்சர் ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை!!
கனிம சோதனைக்கான ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடத்தப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை அவற்றின் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகியும் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதுக்குறித்து பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன.
அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எப்படியாவது எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசு செயல்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திராவிடம் வேறு தமிழ் வேறு என்று சிலர் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக எதிர்ப்பை தமிழ் தேசியம் எனக் கூறி ஒரு போலி அரசியலை செய்கிறார்கள். தமிழர்களின் தொன்மை கீழடி ஆய்வறிக்கையில் வெளிப்பட்டுள்ளது. கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் இத்தனை காலம் சொல்லி வந்தது பொய் என கீழடியில் தெரியவந்துள்ளது.
இதை ஒன்றிய பாஜகவால் ஏற்க முடியவில்லை. உலகின் மூத்த இனங்களில் ஒன்றான தமிழர்களின் கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு உள்ளதை உள்ளபடியே வெளியிட வேண்டும். கனிம சோதனைக்கான (CARBON DATING) ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு ரூ.40-45 கோடிதான் ஆகும். ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம். ஒன்றிய அரசின் தொல்லியல்துறை அதை ஏற்கும்போது ஏற்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!