×
 

அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி: தமிழக சட்டமன்றத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர்கள் இடம்பெறாதது தொடர்பாக உள்நோக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிழைகள் இனி ஏற்படாமல் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்கள் என நம்புவதாக அவர் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என்றும் திருமாவளவன் கூறினார். அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் அவர் வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை அச்சுறுத்தும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறப்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியினரின் கோரிக்கையையும் அவர் வரவேற்றார்.

தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்தார். பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் போட்டியிடுவது இயல்பான அரசியல் நடைமுறைதான் என்றும், ஆனால் அவர்களை இரக்கத்தின் அடிப்படையில் நிறுத்துவது போன்ற மனநிலை இருக்கக்கூடாது என்பதையே வன்னியரசு வலியுறுத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அதிகாரிகள் கருதுவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

தற்போது ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்படும் நிலையில், தலித் மக்களின் நலனுக்காக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தலித் மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தலித் மக்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் கூறினார்.

இந்த விவகாரங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். அவரது பேச்சு, சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர்கள் இடம்பெறாத விவகாரம் முதல் தலித் மக்களின் பாதுகாப்பு வரை மீண்டும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share