×
 

திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடிக்கு மேல் மதிப்புள்ள மண் முறைகேடாக அள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: திருவண்ணாமலையில் தி.மு.க., மாநாடு நடைபெற்ற இடத்தை சமப்படுத்துவதற்காக அருகில் உள்ள ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கும் மேல் மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகார் மனுவில், கடந்த 2025 டிசம்பர் 14-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் தி.மு.க., மாநாடு நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு எ.வ.குமரனுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 125 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் நடத்தப்பட்டதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

மாநாடு நடைபெற்ற இடத்தை சமன்படுத்துவதற்காக, அதற்கு அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து பெருமளவில் மண் அள்ளப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஏரியில் இருந்து அள்ளப்பட்ட மண் மாநாடு நடைபெற்ற பகுதியில் கொட்டப்பட்டு, நிலப்பரப்பு சமன்படுத்தப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹப்பாடா! எ.வ. வேலுவுக்கு நிம்மதி... லுக் அவுட் நோட்டீஸ் ரத்து! தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி!

இவ்வாறு அள்ளப்பட்டதாகக் கூறப்படும் மண்ணின் மதிப்பு ரூ.8 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அறப்போர் இயக்கம் மதிப்பிட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைக்கு வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. புகாருடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் அளித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தரப்பில் உடனடியாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால், ஏரியில் இருந்து உண்மையில் எவ்வளவு மண் அள்ளப்பட்டது, அதற்கு அனுமதி பெறப்பட்டிருந்ததா, மண்ணின் அளவு மற்றும் மதிப்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.

இதற்கிடையே, கடந்த ஜூன் 25-ம் தேதி சாலை அமைக்காமலேயே சாலை அமைத்ததாக கணக்கு காட்டி ரூ.3.2 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

ஒரே காலகட்டத்தில் எ.வ.வேலுவைச் சுற்றி அடுத்தடுத்து முறைகேடு புகார்கள் மற்றும் வழக்குகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், திருவண்ணாமலை ஏரி மண் தொடர்பான புதிய புகார் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
 

இதையும் படிங்க: அமித் ஷா வருகையால் தமிழகம்–புதுச்சேரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு! 3 நகரங்களில் பரபரப்பு! முழு விவரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share