தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!
''சட்டசபை தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் இழைப்பது தான் பாஜகவின் அரசியல் பண்பு. யாரைத் தோளில் சுமந்தாலும், பின்னர் அவர்களை வீழ்த்தி மிதிப்பது பாஜகவின் வழக்கம். தமிழகத்தில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுகவை வீழ்த்தி, அந்த இடத்தை பாஜக கைப்பற்ற விரும்புகிறது. அதனால்தான் அதிமுகவை முன்னிறுத்தி, பின்னர் அதை வீழ்த்தும் உத்தியை பாஜக கையாள்கிறது” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்தத் தேர்தலில் பாஜக 27 இடங்களிலும், தமாகா 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்த அளவுக்கு இடம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்” என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!
செய்யூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்துப் பேசிய திருமாவளவன், “ஜெயலலிதா ‘மோடியா, லேடியா’ என்று சவால் விட்டவர். இப்போது எடப்பாடி பழனிசாமி அப்படி சவால் விட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுகவுடன் தங்களது கூட்டணி கொள்கை அடிப்படையிலானது என்று வலியுறுத்திய அவர், “திமுக அரசை சிறுத்தைகளின் அரசாக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். நம்ப முடியும். திமுக தலைமையிலான அரசு, விசிகவின் அரசாக இயங்க முடியும். பாஜகவுடனும், பாமகவுடனும் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம்.
எங்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. எங்கள் எதிர்காலமும், தமிழகத்தின் எதிர்காலமும், தமிழ் மக்களின் எதிர்காலமும் முக்கியம். மிட்டாய் காட்டி எங்களை ஏமாற்ற முடியாது. அதனால்தான் திமுகவுடனான உறவை ‘உடும்புப் பிடி உறவு’ என்று சொல்கிறேன். இது கொள்கைப் பிடிப்பு காரணமாகும்” என்றார்.
சமூக நீதி, வலதுசாரி எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, ஜாதிவாரி அரசியல் எதிர்ப்பு உள்ளிட்ட பல கொள்கை அம்சங்களில் திமுகவுடன் தங்களுக்கு ஒற்றுமை இருப்பதாக திருமாவளவன் விளக்கினார்.
தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் திருமாவளவனின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!