×
 

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

கட்சி அலுவலகத்தில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆசிஷ் பானர்ஜி, கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்பூர்ஹாட் பகுதியில் வசித்து வந்த ஆசிஷ் பானர்ஜி, தனது வீட்டுக்கு அருகே அமைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிஷ் பானர்ஜி ராம்பூர்ஹாட் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். குறிப்பாக, துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இதையும் படிங்க: ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராம்பூர்ஹாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் துருபா சஹாவிடம் ஆசிஷ் பானர்ஜி தோல்வியடைந்திருந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகும் கட்சி நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கட்சி அலுவலகத்தில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் வெளியானதும் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.

ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க அரசியலில் நீண்டகாலம் முக்கியத்துவம் பெற்ற ஒரு மூத்த அரசியல் பிரமுகர் கட்சி அலுவலகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டிருப்பதால், இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையின் முடிவில் மட்டுமே இது தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது தெரியவரும்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share