தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார், இன்று ஆளுநர் மாளிகைக்கு வந்து, ஆளுநர் ஆர்லேகரை சந்தித்துப் பேசி வருகிறார்.
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை சந்தித்துப் பேசினார். அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முக்கிய கோப்புகளை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 10-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து 6 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. துறை ஒதுக்கீடு தாமதமானால் அரசின் அன்றாடப் பணிகள் முடங்கும் அபாயம் இருந்தது.
ஆளுநர் ஆர்லேகர் கேரளம் சென்றிருந்த நிலையில், நேற்று மாலை சென்னை திரும்பினார். இன்று முதல்வரின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் அவரை சந்தித்தபோது, அமைச்சர்களுக்கான துறைப் பொறுப்புகள் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முழு விவரங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் வேலுமணி அணியினருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.
இதையும் படிங்க: இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், அமைச்சரவை முழுமையடைந்தவுடன் துறைவாரியான பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நிலுவையில் உள்ள பல்வேறு முக்கிய திட்டங்கள், மானியக் கோரிக்கைகள் மற்றும் அன்றாட அரசு நடவடிக்கைகள் துறை ஒதுக்கீட்டுக்குப் பிறகு வேகம் பெறும்.
அமைச்சரவை விரிவாக்கம் முடிவடைந்த பிறகு, புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து முதல் சட்டசபைக் கூட்டம் விரைவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு எப்படி செயல்படும் என்பதில் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!