வீடு புகுந்து தாக்கிய வழக்கு! தவெக அமைச்சருக்கு சிக்கல்! மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுவை கோர்ட் உத்தரவு!
தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் தொடர்பான கொலை முயற்சி வழக்கில், அவர் நாளை கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மீதும் கவனம் திரும்பியுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழ்நாடு அரசில் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொழில் தொடர்பான போட்டி மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, மரிய வில்சன் தனது சகோதரரின் வீட்டிற்குள் நுழைந்து இருவரையும் தாக்கியதாக அந்த புகாரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணையும் திருச்சி சிவா மகள்! கணவரும், அப்பாவும் திமுக! தவெகவில் புதுவரவு!
இந்த புகாரைத் தொடர்ந்து, மரிய வில்சன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு பல கட்டங்களாக விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நீதிபதி, அடுத்த விசாரணையின்போது அமைச்சர் மரிய வில்சன் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் வழக்கின் விசாரணை புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில், தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பேசுபொருளானது. இருப்பினும், அந்த வீடியோக்களின் உண்மைத் தன்மை அல்லது அவை வழக்கில் ஆதாரமாக ஏற்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து நீதிமன்றத்தில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைச்சர் நாளை ஆஜராகிறாரா, அல்லது சட்டரீதியாக வேறு மனு தாக்கல் செய்கிறாரா என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெறும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இறங்கிய பேரிடி..! கட்சியிலிருந்து விலகிய வைகைச் செல்வன்..! அதல பாதாளத்தில் அதிமுக..!!